ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் அருகே போதை ஆசாமிகளால் தாக்கப்பட்டு இறந்த கல்லூரி மாணவனின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் அருகே போதை ஆசாமிகளால் தாக்கப்பட்டு இறந்த கல்லூரி மாணவனின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
விராலிமலை அன்பு நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் ரஞ்சித் கண்ணன்(18). இவர் திருச்சி ஈ வி ஆர் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் . இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று பின்னர் காவிரி ஆற்றை சுற்றிப் பார்ப்பதற்காக தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது காவிரி கரையோரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த அந்த இளைஞர்கள் ரஞ்சித்கண்ணுவையும் அவரது நண்பரையும் அழைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரஞ்சித் கண்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இறந்த ரஞ்சித் கண்ணனின் குடும்பத்திற்கு நேற்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க சென்ற விராலிமலை தொகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ரஞ்சித் கண்ணணை அங்கு மதுபோதையிலும் கஞ்சா போதையிலும் குற்றப் பின்னணியை கொண்ட 5பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு கண்மூடித்தனமாக ரஞ்சித் கண்ணனை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்திருக்கிறார்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இந்த ஆட்சியிலே நடந்தேறி வருகிறது. இது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வாகும்.
ஆனால் இந்த நிகழ்வில் காவல்துறை இரும்பு கரம் கொண்டு 5பேரையும் கைது செய்திருக்கிறார்கள். இருப்பினும் இதனை சிறப்பு வழக்காக எடுத்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும் . இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு நிலை குலைந்து போயிருக்கிறது. என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று. இது போன்ற குற்றச்சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு போதை பழக்கம் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே அதனை தடுக்க தமிழக அரசு முழு கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே ஏழை கல்லூரி மாணவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஆறுதலாக இருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.