தமிழ்நாடு முழுவதும் பிப்.17ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலவரையின்றி மூடல்..!!

தமிழ்நாடு முழுவதும் பிப்.17ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலவரையின்றி மூடல்..!!

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி வந்த ஊழியர்கள், தற்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.

சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி., பாட்டாளி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. தொடர் போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், வரும் 17ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி 16) இரவு 10 மணிக்கு கடைகளை மூடியவுடன், அதன் சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு 17ஆம் தேதி முதல் பணிக்குச் செல்லப் போவதில்லை என ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 4,749 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக மிக குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். “இவ்வளவு காலம் உழைத்தும் எங்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வராதது வேதனையளிக்கிறது. 14 நாட்களாக போராடியும் அரசு எங்களைக் கண்டுகொள்ளாததால், வேறு வழியின்றிப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடையாளப் போராட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் காலி பாட்டில் ஸ்டிக்கர்களை ஒப்படைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்