திருச்சி மத்திய சிறை வளாகத்தில்  ஜன்னல் கம்பியை வளைத்து. தப்பிஓடியஇலங்கை கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில்  ஜன்னல் கம்பியை வளைத்து. தப்பிஓடியஇலங்கை கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. இந்த சிறப்பு முகாம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாதுகாப்பு பணிக்கு சிறைக்காவலர்களும், மாநகர போலீசாரும் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களுக்கு சொந்த நாட்டுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை இந்த சிறப்பு முகாமில் தான் தங்கி இருக்க வேண்டும்.

அதன்படி, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, நைஜீரியா, பல்கேரியா, இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர்.

இவர்களில் இலங்கை திரிகோணமலையை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் அப்துல் ரியாஸ்கான் (வயது 40) என்பவர்.  கடந்த 2018-ம் ஆண்டு கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடி வந்தார். பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் பதிவு செய்யாமல், மதுரை மற்றும் புதுச்சேரியில் தங்கி இருந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் சுற்றித்திரிந்த அப்துல் ரியாஸ்கானை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மதுரை தெற்கு வாசல் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இன்றி அப்துல் ரியாஸ்கான் மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பாஸ்போர்ட் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த அப்துல் ரியாஸ்கான் 2020 முதல் 2022 வரை சென்னை, ராமநாதபுரம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்தார். இதுதொடர்பாக இவர் மீது சுமார் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருட்டு வழக்கில் ராமநாதபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அப்துல் ரியாஸ்கான் மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் சென்னை புழல் சிறையில் இருந்த அப்துல்ரியாஸ்கான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அறை எண்:9-ல் தங்கவைக்கப்பட்டிருந்த அப்துல் ரியாஸ்கான் கடந்த 16-ந்தேதி திருட்டு வழக்கு விசாரணைக்காக ராமநாதபுரம் 2-வது ஜூடிசியல் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, அன்று இரவு மீண்டும் திருச்சி சிறப்பு முகாமில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை சிறப்பு முகாமில் தங்கி உள்ளவர்கள் இருப்பு பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, அப்துல் ரியாஸ்கான் முகாமில் இல்லாதது தெரியவந்தது. அவருடைய அறைக்கு சென்று பார்த்த போது, அறையின் ஜன்னல் கம்பி அறுத்து உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அங்கிருந்த சிறைக்காவலர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது தான் அப்துல் ரியாஸ்கான் அங்கிருந்து ஜன்னல் கம்பியை அறுத்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிறப்பு முகாம் சப்-கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 3 நாட்களுக்கும் மேலாக அப்துல் ரியாஸ்கான் அறையில் இருந்து வெளியே வராததும், அவருடைய அறை பூட்டியே இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் முகாமில் இருந்து தப்பி 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் அவருடைய உறவினர்கள் ராமேசுவரம் மற்றும் புதுச்சேரி அகதிகள் முகாமில் தங்கி இருப்பதால், அவர் ராமேஸ்வரம் அல்லது புதுச்சேரி வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இலியான் ஜிட்ராகர் மார்கோவ் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் தங்கி இருந்த ஜன்னல் கம்பியை அறுத்து தப்பிச்சென்றார். 3 ஆண்டுகள் ஆகியும் அவர் இதுவரை சிக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்றும் தெரியவில்லை. அவரை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் மேலும் ஒரு கைதி சிறப்பு முகாமில் இருந்து தப்பிச்சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி அப்துல் ரியாஸ்கான் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வழக்கு மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து 4 போலீசார் அப்துல் ரியாஸ்கானை மதுரைக்கு அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு, மீண்டும் புழல் சிறைக்கு பஸ்சில் அழைத்து சென்ற போது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இரவு உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்ட போது, அவர் அப்துல் ரியாஸ்கான் அங்கிருந்து தப்பிச்சென்றார். மறுநாள் அவர் கள்ளத்தனமாக படகில் இலங்கை செல்ல ராமேசுவரம் அருகே பாம்பன் சென்றபோது போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் மீண்டும் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்