பட்டா பெயர் மாற்றம் செய்ய, ரூ.10,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது.
பட்டா பெயர் மாற்றம் செய்ய, ரூ.10,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது.
திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த பொன்னையா மகன் முனியப்பன் (வயது 59). இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில், 1,200 சதுரஅடி கொண்ட ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.
அந்த மனையினை, உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த, 11 .7 .2024 அன்று விண்ணப்பித்துள்ளார்.
முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
அவரது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (வயது 34) என்பவரை அணுகியபோது,
அவர் உட்பிரிவு செய்து தர, ரூ.15,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில் முருகேசன், 5000 ரூபாய் குறைத்துக் கொண்டு, ரூ.10,000 கொடுத்தால்தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன், திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் குழுவினருடன் முனியப்பனிடமிருந்து, சர்வேயர் முருகேசன், ரூ.10,000 பத்தாயிரம் லஞ்ச பணத்தை, கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சர்வேயர் முருகேசனை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.