இலங்கைத் தமிழர் உயிரிழந்தது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகள் உண்ணாவிரதம்.
இலங்கைத் தமிழர் உயிரிழந்தது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகள் உண்ணாவிரதம்.
மேலும் ஒருவர் உலகத் தமிழர்களுக்கு கடிதம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய, இலங்கைத் தமிழர் சாந்தன் ( 55) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் புதன்கிழமை உயிரிழந்தார். திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த அவருக்கு கல்லீரல் செயலிழப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறந்தார்.
ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிறைத் தண்டனைக்குப் பின்னரும் அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் உயிரிழந்தார் எனக்கூறி சக அகதிகள் முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் திருச்சியில், புதன்கிழமை முதல் உண்ணா விரதம் மேற்கொண்டனர்.
வருவாய்த்துறையினர் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை வாபஸ் பெற்றார். மற்றவர் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடை மற்ற சிலரும் திருச்சி அகதிகள் முகாமில் உள்ளனர். இதில் ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்காக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், 33 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார். அதுபோலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.