கச்சா எண்ணெய் விலை உயர்வு. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% உயர்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 3 மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகநாடுகளில் எரி பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2020-ம் ஆண்டுக்கு பிறகு இன்று ஒரே நாளில் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.62 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 83.32 டாலராகவும் , WTI கச்சா எண்ணெய் விலை 9.4 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 78.14 டாலர் ஆகவும் வர்த்தகமாகிறது.
மேலும் ஈரான்–அமெரிக்க போரால் பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.69 ரூபாய் உயர்ந்து, லிட்டர் ரூ.109.46-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 1.71 ரூபாய் உயர்ந்து ரூ.101.26-க்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை ஒரே நேரத்தில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வு தொடரும் என்றே கணிக்கப்படுகிறது.